வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: லாரிகளில் அதிக பாரம் ஏற்ற அரசு ஊக்குவிப்பதைக் கண்டித்து, இன்று முதல் மூன்று நாட்கள், சரக்கு லாரிகளை நிறுத்தப் போவதாக, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து எம் - சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறியதாவது: தமிழகத்தில், நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், கனிம வளங்களை, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, ஐந்து மடங்கு அதிகமாக லாரிகளில் ஏற்றுவது தான்.
இதனால், கனிம வளங்கள் கொள்ளை போவதோடு, சாலைகளும், லாரிகளும் பாதிக்கப்பட்டு, விபத்துகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில், கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னுக்கும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். பாரத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
இதனால், லாரி உரிமையாளர்கள் அதிக பாரம் ஏற்ற மறுத்தனர். ஆனால், கனிம வள டெண்டர் எடுத்துள்ளோரோ, சொந்தமாக லாரிகளை வாங்கி, முறைகேடாக பல லட்சம் டன் கனிம வளத்தை கொள்ளை அடிக்கின்றனர். அதிக பாரத்தைக் கண்டறிந்து, கூடுதல் பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்ற விதியை மதிக்காமல், போலீசாரும், போக்குவரத்து துறையினரும், லஞ்சம் பெற்று வாகனங்களை விடுவிக்கின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு கோரி, அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, கடலுார், திருவண்ணாமலை ஆகியவற்றில், இன்று முதல் 3ம் தேதி வரை, மணல் லாரிகளை இயக்காமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, போக்குவரத்து துறை கமிஷனரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.