வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சீனாவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தி வருவதால் ஏற்றுமதி 'ஆர்டர்'கள் இந்தியாவை நோக்கி திரும்பி உள்ளதாக ஜவுளித் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு அதிக விலைக்கு பருத்தி விற்கப்பட்டதால் கூடுதல் விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள், பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில் தயக்கம்காட்டுகின்றனர்.
நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்த்து, விவசாயிகள் இருப்பு வைத்துள்ளதால் விலை வீழ்ச்சி அடையாமல் சீராக இருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நுால் விற்பனை சூடுபிடிக்கதுவங்கியுள்ளது.
பஞ்சு விலை நிலையாக இருப்பதால் நுால் விற்பனையும் ஜவுளி வர்த்தகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
இது குறித்து ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பருத்தி விலை அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இழந்த நுால் மற்றும் ஆடை ஏற்றுமதி சந்தையை, சாதகமான பருத்தி விலையில், மீண்டும் கைப்பற்ற துவங்கியிருக்கிறோம்.

செப்., - அக்., மாதங்களில் சரிந்த நுால் ஏற்றுமதி டிச., மாதம், 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு மாதமாக, இந்திய பருத்தி விலை ஸ்திரத்தன்மையை அடைந்து உள்ளதால், உள்நாட்டு நுால் மற்றும் ஆடை வியாபாரமும்உயரத் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சாகுபடி செய்யப்படும் பருத்தியின் அளவு மற்றும் மகசூல் விபரம் ஏப்., மாதம் தெரிய வரும். அதுவரை, பருத்தி வர்த்தகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
வெளிநாட்டு சில்லரை விற்பனை கடைகளில் சரக்கு குறைந்து புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது. 'பிராண்டட்' நுாலிழை மற்றும் ஆடைகளுக்கான ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன.சீனாவில் மீண்டும் கொரோனா பரவியுள்ள நிலையில் அந்த நாட்டுக்கான ஆர்டர்கள் பெருமளவு இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன. இதனால் இம்மாதத்தில் இருந்து நுால் வர்த்தகமும் சிறப்பாக அமையும் என நுாற்பாலைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -