வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கும் உரிமை உள்ளது எனக்கூறி, மைசூரைச் சேர்ந்த முதியவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன், 83, என்பவர் தாக்கல் செய்த மனு: என் பெற்றோர் ஜெயராம் - ஜெயம்மா. இவர்களுக்கு நான் மட்டுமே வாரிசு. வேதவல்லியை, இரண்டாவதாக என் தந்தை திருமணம் செய்தார். அவர்களுக்கு, ஜெயகுமார், ஜெயலலிதா பிறந்தனர். அதனால், எனக்கு, அவர்கள் இருவரும் சகோதர, சகோதரி ஆவர். கடந்த, 1950ல், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு, மைசூரு நீதிமன்றத்தில் என் தாயார் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தந்தை இறந்ததால், வேதவல்லி மற்றும் அவரது வாரிசுகள் ஜெயகுமார், ஜெயலலிதா ஆகியோரை, பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். இந்த வழக்கு சமரசத்தில் முடிந்து விட்டது.

ஜெயலலிதா இறப்புக்கு முன், ஜெயகுமார் இறந்து விட்டார். சகோதரர் என்ற முறையில், நான் நேரடி வாரிசு. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களில், பாதியை நான் பெற உரிமை உள்ளது. தீபா, தீபக் தான் சட்டப்பூர்வ வாரிசு என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, 'வாபஸ்' பெற வேண்டும். தாமதமாக தாக்கல் செய்யும் இந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் ஆதார ஆவணங்கள் பெறுவதற்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.