வேலுார், பிப். 1-
இரண்டு நாள் பயணமாக, வேலுாருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலின், 2 நாள் பயணமாக இன்று வேலுாருக்கு வருகிறார். இதற்காக சென்னையிலிருந்து ரயில் மூலம், இன்று மதியம், 12:00 மணிக்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
அங்கிருந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதியம், 12:30 மணிக்கு நடக்கும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
காட்பாடியில் தனியார் ஓட்டலில் தங்கும் முதல்வர் அங்கு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார். மாலை, 5:00 மணிக்கு வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். விழா முடிந்ததும், வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் முதல்வர் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு செய்கிறார்.
நாளை காலை, 10:30 மணிக்கு வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு துறைகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். ஆய்வு முடிந்ததும் ரயில் மூலம் காட்பாடியிலிருந்து சென்னைக்கு செல்கிறார்.
இதையொட்டி, வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் விழா நடக்கும் இடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அதில், வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு தி.மு.க.,-எம்.எல்.ஏ., நந்தகுமார் பங்கேற்றனர்.