2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பலரும் எதிர்பார்த்தது போல் வரி வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கான வரியும் 42.74 சதவீதமாக இருந்தது, தற்போது 7% குறைக்கப்பட்டுள்ளது.
வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்களுக்கு அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப மத்திய அரசு வரி பிடித்தம் செய்கிறது. இம்முறை பட்ஜெட்டில் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி ஏதும் பிடிக்கப்படாது. இதனுடன் வீட்டு வாடகை, முதலீடுகள் போன்றவற்றை கணக்கு காட்டினால் இது ரூ.8.5 லட்சம் வரைக்குமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டி இருக்காது. விலைவாசி உயர்ந்து, செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், இந்த வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே போல் பணக்காரர்களுக்கான வரி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறும் போது, உலகிலேயே இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தான் அதிகபட்சமாக 42.74% வரி செலுத்துகிறார்கள் என்றார். அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 10% கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15% கூடுதல் கட்டணம். ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25% கூடுதல் கட்டணம், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 37% கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது.
தற்போதைய பட்ஜெட் அறிவிப்பில், புதிய வரி திட்டத்தின் படி ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கான இந்த சர்சார்ஜ் எனும் கூடுதல் கட்டணம் 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 42.74 சதவீதத்திலிருந்து 39% ஆக குறைந்துள்ளது.