வால்பாறை : வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிக்குள் யாரும் விறகு தேட செல்ல வேண்டாம், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் செழிப்பாக இருப்பதால், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன. இதனால், பகல் நேரத்தில் தொழிலாளர்கள் நிம்மதியாக தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் தவிக்கின்றனர்.
மாலை நேரத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு முன்பாக, யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு அங்கு பயிரிடப்பட்ட வாழைகளை உட்கொள்கின்றன. இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் விடிய, விடிய துாங்க முடியாமல் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பருவமழைக்கு பின், வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால், எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போதிய அளவு கிடைப்பதால், நிரந்தரமாக இங்கேயே முகாமிட்டுள்ளன.
யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் விறகு தேட செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
சொன்னா கேளுங்க!
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறை எஸ்டேட்களில் உள்ள, தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகள் விரும்பி உண்ணும் வாழை, பலா, கொய்யா போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகளுக்கு உணவு கிடைப்பதால், அவைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் எஸ்டேட் பகுதியிலேயே முகாமிடுகின்றன.
யானைகளுக்கு பிடித்தமான தோட்ட பயிர்களை குடியிருப்பு பகுதியில் பயிரிட வேண்டாம் என, வனத்துறையினர் பல முறை நோட்டீஸ் கொடுத்தும், அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் தான், எஸ்டேட் பகுதிக்கு யானைகள் வருகை அதிகரித்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.