மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி400 இவி (XUV400) மாடல் முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் டாடா, ஹூண்டாய், கியா, உள்ளிட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் எஸ்யுவி ரக கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனமும், இணைந்துள்ளது. அதன்படி, சமீபத்தில் அறிமுகமான மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 26ம் தேதி துவங்கியது. இந்நிலையில், எக்ஸ்யூவி400 மாடல் முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
![]()
|
அதுமட்டுமல்லாமல், இந்த எக்ஸ்யூவி 400 மாடல் கார்களை 12 மாதங்களில் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வினியோகத்தை பொருத்தவரை தற்போது எக்ஸ்யூவி400 டாப் எண்ட் மாடல் EL வேரியண்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
பேட்டரியை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி400 மாடலில் 39.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு EL வேரியண்ட் உடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 456 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்றுள்ளது.
![]()
|
இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 18. லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 மாடல் விற்பனையில், டாடா நெக்சான் EV, எம்ஜி ZS EV மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.