சம்பளதாரர்கள் மிகவும் எதிர்பார்த்த வருமான வரிச் சலுகை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டு வருமான வரி விலக்கு, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர, புதிய வரி முறையே இனி இயல்பான வரி முறையாக இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் பழைய வரி முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.கடந்த 2020ல், வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஏற்கனவே உள்ள வரி விதிப்பு நடைமுறை, பழைய வரி முறை என்றும்; ஆறு அடுக்குகளுடன் கூடியது, புதிய வரி விதிப்பு முறை என்றும் அறிவிக்கப்பட்டது.
பழைய வரி விதிப்பு முறையில் வருமான வரிச் சலுகைகள் உண்டு. ஆனால், புதிய வரி விதிப்பு முறையில், குறிப்பிட்ட சில வருமான வரிச் சலுகைகளை பெற முடியாது.
அதே நேரத்தில் பழைய முறையை விட புதிய முறையில் வரி விதிப்பு சதவீதம் குறைவு.
தற்போது, வருமான வரி குறித்து ஐந்து முக்கிய அறிவிப்புகள், 2023 - 24 பட்ஜெட்டில் அறிவிக்கப்
பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள்:
1புதிய வருமான வரி முறையின் கீழ், ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை. இந்த வரிச் சலுகை, வரும் நிதியாண்டில் 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அதே நேரத்தில் பழைய வருவாய் முறையை தொடர்வோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் வரிச் சலுகை கிடைக்கும்.
2புதிய வருவாய் முறையில் வரி அடுக்குகள் ஆறில் இருந்து ஐந்தாக மாற்றப்பட்டுள்ளன; வரி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வருவாய் சலுகை, 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி ஏதும்
கிடையாது.
இதனால், அதிக பலன் மக்களுக்கு கிடைக்கும். உதாரணத்துக்கு, 9 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர், இதற்கு முன், 60 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தினார். இனி, 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரியாக செலுத்த நேரிடும்.
3ஆண்டு வருமானம், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, 52 ஆயிரத்து 500 ரூபாய் நிரந்தர கழிவு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
4இதுவரை வருமான வரியில் அதிகபட்சமாக இருந்த வரி விகிதம், 42.74 சதவீதத்தில் இருந்து, 39 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
5பணியில் இருந்து ஓய்வு பெறும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், விடுப்பு ஈட்டுத் தொகைக்கான வரிச் சலுகை உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயாக இருந்தது. 2002ல் கடைசியாக இதில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது அரசு பணியில் அதிகபட்ச அடிப்படை சம்பளம், 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
தற்போது சம்பளம் உயர்ந்துள்ளதால், இந்த விடுப்பு ஈட்டுத் தொகைக்கான வரிச் சலுகை
உச்ச வரம்பு, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.