ரவிசாம், தலைவர், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா):
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் பட்ஜெட். உள்கட்டமைப்பு, முதலீடு, திறன்மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதிக தொழிலாளர்கள், அதிக மூலதனம் கொண்ட, அதிக மின்சாரம் உபயோகிக்கும் ஜவுளித்தொழிலுக்கு மிகவும் உதவிகரமான பட்ஜெட்டை வழங்கியமைக்காக, பிரதமர் மோடி மற்றும் நிதி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களுக்கு நன்றி.
'சைமா' கோரிக்கையை ஏற்று மிக நீண்ட இழை பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பொது தனியார் கூட்டமைப்பில் கிளஸ்டர் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ்- திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'சைமா' உருவாக்கிய மிக நீண்ட இழைப் பருத்தி ரகங்கள் சர்வதேச அளவிலான பருத்தி ரகங்களுடன் நன்றாக ஒத்துப்போகின்றன. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியை அதிகரிக்க, 'சைமா' தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
பருத்தி விவசாயிகள் உட்பட முழு ஜவுளி மதிப்பு சங்கிலிக்கும், மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் இத்திட்டம் உள்ளது. நீண்ட இழைப் பருத்திக்கான பி.டி., தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கூடுதல் நீண்ட இழை பருத்திக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதல் நீண்ட இழை பருத்தியின் தேவை 20 லட்சம் பேல்களாக உள்ள நிலையில், நம் நாட்டில் 5 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தியாகின்றன. எனவே, சிறந்த தரமான பருத்திக்கு, இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டிஉள்ளது.
![]()
|
பிணையமில்லா கடன் திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயனடையும் வகையில், 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 சதவீதத்துக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டுள்ள ஜவுளித் துறை மிகுந்த பயன்பெறும். திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்துக்கான நிதி, 900 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருத்தி வகைகளுக்கு அவற்றின் நீளத்தைப் பொறுத்து ஹெச்.எஸ்., குறியீட்டை பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியமைக்கு தொழிற்துறை சார்பாக நன்றி.
நாட்டின் ஜவுளி இயந்திரத் தேவையில் 20 சதவீதம் கூட உள்நாட்டில் உற்பத்தி ஆவதில்லை. பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ளோம். இந்நிலையில், ஜவுளி இயந்திரங்களுக்கான அடிப்படை சுங்கவரியை 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்த எடுத்த முடிவைத் தவிர்த்திருக்கலாம். இந்த முடிவு, இந்திய ஜவுளித் துறையின் சர்வதேச போட்டித் திறனை பாதிக்கும்.
மேலும், 2022 மார்ச் வரை நடைமுறையில் இருந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் தற்போது இல்லாத சூழ்நிலையில், மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பி.எல்.ஐ., மற்றும் பி.எம்., மித்ரா திட்டம் ஆகியவற்றின் வெற்றி விகிதத்தை சிறிதளவு பாதிக்கும்.