திருப்போரூர்:சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்க எல்லைகள், 2007ம் ஆண்டு, 35 கி.மீ.,லிருந்து, 50 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதன் காரணமாக, திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்போரூர் தடத்தில், ஆரம்பத்தில் 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, 100க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், இங்குள்ள பேருந்து நிலையத்தில், இட வசதி, மேற்கூரை, குடிநீர் என, அனைத்து வசதிகளுடன் கூடிய நேர காப்பாளர் அலுவலகமும் உள்ளது.
கேளம்பாக்கம் மற்றும் சிறுசேரி பூங்காவிற்கும், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்போரூர் சுற்றுவட்டார கிராம மக்கள், மாணவர்கள் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர்.
இவர்கள், மாதாந்திர பயணச்சீட்டு வாங்க, திருவான்மியூர், அடையாறு, தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிஉள்ளது.
எனவே, திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி, திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பயணச்சீட்டு மையம் அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.