சென்னை:''சென்னையில் நடந்த மூன்று நாள் 'ஜி - 20' கல்வி பணிக் குழு கூட்டத்தால், கல்வி, வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் உருவாகும்,'' என, மத்திய உயர் கல்வி துறை செயலர் சஞ்சய்மூர்த்தி, மத்திய பள்ளிக் கல்வி துறை செயலர் சஞ்சய்குமார் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
சென்னையில் அவர்கள் அளித்த பேட்டி:
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட, 20 நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி - 20' உச்சி மாநாடு, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, ஜி - 20 கல்வி பணிக் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் மூன்று நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
இதில், 30 நாடுகளைச் சேர்ந்த, 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 'யுனிசெப்' உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. தமிழக மக்கள் அளித்த வரவேற்பு, உபசரிப்பில் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடிப்படை எண்ணறிவு எழுத்தறிவு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தொழில் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் ஆகிய நான்கு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை, அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இவற்றை சாத்தியமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை மேம்படுத்துவது, கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அஸ்திவாரமான பள்ளிக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து, பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை முன்வைத்தனர்.
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. கல்வித் துறையில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நல்ல அம்சங்களும் உள்ளன. அவை இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
இதை தொடர்ந்து, அமிர்தசரஸ், புவனேஸ்வர், புனே ஆகிய நகரங்களில் கல்வி பணிக் குழு கூட்டங்களும், நிறைவாக புனேவில் கல்வி அமைச்சர்கள் மாநாடும் நடக்கவுள்ளது.
சென்னை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்த கூட்டங்களில் முன்வைக்கப்படும். அடுத்த ஆண்டுக்கான ஜி - 20 மாநாடு பிரேசிலில் நடக்கவுள்ளது. அந்நாட்டு பிரதிநிதிகளும் சென்னை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.