சென்னை:'அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களிடம், 10 மடங்கு மின் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய மூன்று பேருக்கு, ஆவடி தாசில்தார் 'நோட்டீஸ்' அனுப்பினார். வீடுகளை காலி செய்யும்படி, அந்த நோட்டீசில் கூறப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூவர், வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின், 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால், நோட்டீசுக்கு தடை விதிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, 10 மடங்கு கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட நிலத்துக்கு பட்டா இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆவடி தாசில்தாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.