விவசாயி கணவருக்கு விஷ ஊசி செலுத்திய 'கல்யாண ராணி' கைது

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 03, 2023 | |
Advertisement
திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அடுத்த தோட்டத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; விவசாயி. இவருக்கு சொந்தமாக, 80 சென்ட் நிலம் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், 'புரோக்கர்' மூலம் திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி, 36, என்பவரை திருமணம் செய்தார். தேவியுடன் ஏற்பட்ட தகராறால் சுப்பிரமணியின் தாய் கோபித்து, அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து,
crime, police arrest, crime roundup

திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அடுத்த தோட்டத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; விவசாயி. இவருக்கு சொந்தமாக, 80 சென்ட் நிலம் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், 'புரோக்கர்' மூலம் திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி, 36, என்பவரை திருமணம் செய்தார். தேவியுடன் ஏற்பட்ட தகராறால் சுப்பிரமணியின் தாய் கோபித்து, அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து, சுப்பிரமணியத்திடம், தேவி, 'உங்கள் தாய் மற்றும் சகோதரியிடம் கையெழுத்து வாங்கி நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல் சென்று குடியிருப்போம்' என, கூறினார்; இதற்கு அவர் மறுத்தார்.


இதற்கிடையே, கடந்த மாதம், 15ம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்த, சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளதை கண்டறிந்தனர். கடந்த, 27ம் தேதி சுப்பிரமணிக்கு மயக்கம் தெளிந்தது. அவர் அளித்த தகவல் படி, குன்னத்துார் போலீசார், தலைமறைவான தேவியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


போலீசார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் தேவி. அவருக்கு பெற்றோர் இல்லை. முத்துக்குமார் என்பவரை முதல் திருமணம் செய்தார்; அவரை பிரிந்து விட்டார். பின், சுப்பிரமணியை இரண்டாவது திருமணம் செய்தார். சுப்பிரமணிக்கு ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை செலுத்தினார். சுப்பிரமணிக்கு வலிப்பு ஏற்பட்டு நினைவு இழந்தார்.


பயந்துபோன தேவி, நாமக்கல் மாவட்டம், மோகனுார் சென்றார். அங்கு, முதல் கணவர் முத்துக்குமாரின் உறவினரான, ஏற்கனவே தொடர்பில் இருந்த ரவிக்குமாரை சந்தித்து, அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். சுப்பிரமணி நிலத்தை விற்றுக்கொடுத்தால் பணத்தை பறிக்க திட்டமிட்டிருந்தார். சுப்பிரமணி மறுத்ததால், விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.



கலெக்டர் தந்தையை தாக்கி நகை, பணம் கொள்ளை


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூர் மங்கரசு வளையபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 86; அவரது மனைவி சரஸ்வதி 78. தம்பதியர் தோட்டத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.


இரண்டு மர்ம நபர்கள் நேற்று அதிகாலை தோட்டத்தில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கிருஷ்ணசாமியை திருப்புளியால் தாக்கி 7 சவரன் நகை 7000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். தம்பதியருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகள் சாந்தி தர்மபுரி கலெக்டராக உள்ளார்.



கண்டக்டரை கடத்திய 4 பேர் கைது


வேலுாரில் இருந்து அமிர்திக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அரசு பஸ்சில், கண்டக்டராக பாரதிராஜா, 42, பணியில் இருந்தார். அந்த பஸ்சில், வேலுார் மாவட்டம், சாத்துமதுரையைச் சேர்ந்த அரவிந்த், 24, வேலுமணி, 41, வேலுார் கொசப்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் வேலப்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 30, ஆகியோர் மது போதையில் ஏறினர்.


அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால், கண்டக்டர் பாரதிராஜா, அவர்களை பாதி வழியில் பஸ்சிலிருந்து இறக்கி விட்டு சென்றார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செல்லும் வழியில், ஒரு காரை எடுத்துக்கொண்டு, பஸ்சை பின் தொடர்ந்து சென்று, அமிர்தி அருகே பஸ்சை மறித்தனர். கண்டக்டர் பாரதிராஜாவை காரில் கடத்திச் சென்று, வழியில் இறக்கி விட்டு தப்பினர். ஜமுனாமரத்துார் போலீசார், அரவிந்த், வேலுமணி, சத்தியமூர்த்தி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.


latest tamil news


ரஷ்யாவில் வேலை என மோசடி


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 55, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலரிடம், ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்றார்.


ஆனால், ரஷ்யாவிற்கு அனுப்பாமலும், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்தார். பாதிக்கப்பட்டவர்கள், பரமக்குடி எமனேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கருப்பையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



சிறுமி பாலியல் பலாத்காரம்: ஜோதிடருக்கு '20 ஆண்டு'


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 64; ஜோதிடர். கடந்த, 2020ல் தனக்கு பழக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.


இதில், சிறுமி கர்ப்பமானார். ராஜபாளையம் மகளிர் போலீசார், பழனிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில், ஜோதிடர் பழனிசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் நேற்று உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.



சிறைகளில் 348 'மொபைல் போன்'கள் பறிமுதல்


புதுடில்லி சிறைகளில் உள்ள சிறைவாசிகளிடம் இருந்து, கடந்த இரண்டரை மாதங்களில் 348 'மொபைல் போன்'கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X