வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி : அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை சீர்குலைத்து, அதன் வாயிலாக லாபம் அடைந்ததாக, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கள் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இது, நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி, பார்லிமென்டை இரண்டு நாட்களாக முடக்கிஉள்ளன.
இந்நிலையில், எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும், 'ஷார்ட் செல்லிங்' எனும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
|
இவர்கள், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து, அதன் வாயிலாக அதிக லாபம் அடைந்துள்ளனர்.
இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளனர். இதன் வாயிலாக, அப்பாவி முதலீட்டாளர்களையும், இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
இதற்காகவே இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதை செய்துள்ள நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என முன்கூட்டியே யூகித்து, அந்த பங்குகளை அதிகமாக வாங்கி விற்பனை செய்வர்.
பின், அந்த பங்கின் விலை குறைந்ததும், குறைந்த விலைக்கு அந்த பங்குகளை வாங்கி பரிவர்த்தனையை நேராக்கி, குறைந்த காலத்தில் அதிக லாபம் சம்பாதிப்பர். பங்குச் சந்தையின் இந்த நடவடிக்கைக்கு, 'ஷார்ட் செல்லிங்' என பெயர்.
நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிகமாக லாபம் சம்பாதிப்பதற்காக முன்கூட்டியே சதி செய்து, இதற்காகவே அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement