வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில், 240 மாணவர்கள் படிக்கின்றனர்.
நேற்று மதியம், 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில், 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டனர்.
அடுத்ததாக, 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால், புதிதாக வேக வைத்து முட்டை வழங்கினர். அந்த முட்டைகளை சாப்பிட்ட நான்கு மாணவியர் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வயிற்று வலியால் துடித்தனர்.
அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.