காலங்களில் வசந்தம் சிறப்பு. கலைகளிலே ஓவியம் சிறப்பு. ஓவிய கலை எல்லோருக்கும் கைகூடிவிடுவதில்லை. பலருக்கு பயிற்சியால் வரும் ஓவியம்... சிலருக்கு பிறப்பிலேயே இயற்கையாக வரும். இவர்கள் உள்ளுணர்வை உணர்ந்து அதில் ஈடுபாடு காட்டும்போது அக்கலையால் சிகரத்தையும் தொடுவர்.
அப்படியானவர்தான் மதுரை பீபிகுளம் ஜான்சிராணி. மத்திய அரசு அலுவலரான இவர் ஓய்வு நேரத்தில் ஓவியத்திறனை வெளிப்படுத்தி தனது ஆர்வத்துக்கு தீனி போடுகிறார். மணமாகி ஒரு மகன், மகளுக்கு தாயான இவர் அலுவலகம், குடும்ப பணிகளுக்கு இடையே மனதில் தோன்றும் எண்ணங்களையும், அரசியல் தலைவர்கள், இயற்கை காட்சிகள் என என்னென்னவெல்லாம் அவர் மனதை கவர்கிறதோ, அவற்றையெல்லாம் வண்ண வண்ண ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறார்.
கலர் கலரான கைவினைப் பொருட்களையும் தயாரித்து அசத்துகிறார். இவரது எண்ணங்களுக்கு கணவர் ஜெயபாலன் கூர்தீட்டி உதவுகிறார்.பென்சில் ஓவியம், ரங்கோலி ஆர்ட், அலுமினிய பாயிலில் அழகு ஓவிய பிரேம்கள், கிளாஸ் பெயின்டிங், நிப் பெயின்டிங், மண்டலா ஆர்ட் மற்றும் வீணாகும் பொருட்களிலும் கலைநயம் காண்கிறார். தேசிய தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்களை பென்சில் வரைபடமாக தத்ரூபமாக வரைந்து ஆல்பங்களாக்கியுள்ளார்.
'பிசி'யான அலுவலரான இவருக்கு இத்திறனையும் வெளிப்படுத்த எப்படித்தான் நேரம் கிடைத்ததோ என்ற சந்தேகத்தை கேட்டபோது:வீட்டில் ஓய்வாக இருக்கும்போது ஓவியம் வரையும் எண்ணம் வரும். அதனை உடனே செயல்படுத்துவேன். சிறுவயதிலேயே ஆர்வம் இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இதில் அதிக ஈடுபாடு காட்டுகிறேன். தேசிய தலைவர்கள், நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தெய்வங்கள் என மனதில் தோன்றும் அனைத்தையும் வரைவேன். எனது ஓவியங்களை உறவினர்கள், தோழிகளுக்கு பரிசாக வழங்கியுள்ளேன்.
ஓவியம் தவிர அலங்கார கைவினைப் பொருட்களையும் தயார் செய்வேன். ரங்கோலி, ஓவியம் போன்றவற்றுக்கு பரிசு கிடைத்துள்ளது. வருங்காலங்களில் விரும்புவோருக்கு ஓவிய பயிற்சி அளிப்பேன், என்றார்.