ஈரோடு : ஈரோடு அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தை தள்ளி விட்டதில் இறந்தார். இது தொடர்பாக தந்தையிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பி.பி. கார்டனைசேர்ந்தவர் நாட்ராயன் 67; வெங்காயம் வியாபாரம் செய்கிறார். இவரது மகன் சுரேஷ் 32; கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். நாட்ராயன் நேற்று மதியம் வெங்காய விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மது போதையில் வந்த சுரேஷ் தந்தையிடம் வீட்டு சாவியை கேட்டார். அவர் தர மறுக்கவே தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சுரேஷ் அருகில் கிடந்த கம்பியை எடுத்து தந்தையை தாக்க முயன்றார்.
மகனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்து அவரை தள்ளியபோது நிலை தடுமாறி கல் மீது சுரேஷ் விழுந்தார். இதில் தலையின் பின்பக்கம் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
வீரப்பன்சத்திரம் போலீசார் நாட்ராயனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.