வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்க, ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்., 10 முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. எனவே, மின் பயன்பாட்டை குறித்த தேதியில் கணக்கெடுக்குமாறு, ஊழியர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டது.
ஆனால், வழக்கம் போல் ஊழியர்கள் தாமதமாக செல்வதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளிலும், 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரை மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுப்பதில்லை.
நேரில் செல்லாமல், முந்தைய மின் பயன்பாட்டை ஒப்பீட்டு பார்த்து, இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், குறைத்து கணக்கெடுப்பது போன்ற தவறுகளும் நடக்கின்றன.
![]()
|
எனவே, மின் வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள், தினமும் தலா இரண்டு பிரிவு அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்று, மின் பயன்பாடு கணக்கெடுப்பு தொடர்பாக ஆய்வு செய்ய, மின் வாரியம் உத்தரவிட வேண்டும்.
அப்போது தான், அதிகாரிகளின் வருகைக்கு பயந்து, அனைத்து ஊழியர்களும் சரியான தேதியில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பர். இதனால், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாததுடன், மின் வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது.
சில ஊழியர்கள் கணக்கெடுக்க செல்லாமல், தங்களுக்கு வேண்டிய சிலரை கணக்கெடுக்க அனுப்புகின்றனர். இதற்காக அவர்களுக்கு தினமும், 250 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதுதொடர்பாக தீவிர விசாரணைக்கு உட்பட்டால், பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.