வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல், வரும் 10ம் தேதி மாலை வெளியாகும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா., மறைவு காரணமாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, வரும் 27ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது.
எதிர்பார்ப்பு
தி.மு.க., கூட்டணி சார்பில், மறைந்த திருமகன் தந்தை இளங்கோவன், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பிலும், பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததால், தேர்தல் களம் சூடுபிடித்தது.
பழனிசாமி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின், பன்னீர்செல்வம் தன் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே, பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று தென்னரசு மனு தாக்கல் செய்தார்.
தே.மு.தி.க., சார்பில் ஆனந்த்; நாம் தமிழர் என்ற கட்சியின் சார்பில் மேனகா; அ.ம.மு.க., சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பரிசீலனை
இது தவிர, பல 'லெட்டர் பேடு' கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். எந்த கட்சியும் சாராமல், சுயேச்சை வேட்பாளர்களாக, 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வகையில் நேற்று முன்தினம் வரை, 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மட்டும், 37 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில், தென்னரசு உள்ளிட்ட சில வேட்பாளர்கள் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம், 108 வேட்பு மனுக்கள் தாக்கலாகி உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால், மனு தாக்கல் செய்ய, ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்த பின், ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து மட்டும் மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. சரியாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுக்கள், மாற்று வேட்பாளர்கள் மனுக்கள், தள்ளுபடி செய்யப்படும்.
அதேபோல் ஒரே வேட்பாளர் நான்கு மனுக்கள் தாக்கல் செய்திருந்தால், அவர்களின் ஒரு மனு ஏற்கப்பட்டதும், மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், வரும் 10ம் தேதி மாலை 3:00 மணி வரை திரும்ப பெறலாம். அ.தி.மு.க., பன்னீர்செல்வம் வேட்பாளர், அ.ம.மு.க., வேட்பாளர் ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற உள்ளனர். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது, இறுதியாக களத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரிய வரும்.
- நமது நிருபர் -