சென்னை : பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:
பழநி முருகன் கோவிலில கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஜனவரி 27ல் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. ஆகம விதிகளை பற்றி துளியும் கவலைப்படாமல், அறநிலைய துறை அனைத்தையும் செய்துள்ளதாக பக்தர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
தடையின்றி மண்டலாபிஷேகம் நடக்க வேண்டுமானால், இடையில் பெரும் திருவிழாக்கள் வராமல் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் தைப்பூசம் வருகிறது என்பது தெரிந்தும், பழநியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அறநிலைய துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.
இது, அப்பட்டமான ஆகம மீறல். ஹிந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். இதற்காக, அமைச்சர் உள்ளிட்டோர், முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், 'பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என, கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று, உடனடியாக பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.