காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, வழித்தட பிரச்னை தொடர்பாக, விவசாயியை வெட்டி கொன்றவர், டிராக்டரில் சிக்கி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லன்கொட்டாய் முருகன்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 60; இவரது மைத்துனர் மணி, 65. இருவரும் விவசாயிகள். இருவருக்கும் வழித்தட பிரச்னை இருந்து வந்தது. நேற்று காலை வீட்டிலிருந்து பேத்தியை பள்ளிக்கு தன் டி.வி.எஸ்., மொபட்டில் மணி அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு வந்த தங்கவேல் வழித்தட பிரச்னை குறித்து மணியிடம் பேசியபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், தங்கவேல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். அருகேயுள்ள நிலத்தில், மணியின் மகன் சேட்டு, 45, டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற தங்கவேல், சேட்டுவின் காலில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், சேட்டுவின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், தங்கவேல் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மீட்கப்பட்ட சேட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.