திண்டிவனம்-திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 80 வயதுடைய முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் நாடக மேடையில் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
அவரது உடலை, வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீமதி கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.