வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் கடத்தல்காரர்கள் வீசிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகுகள் மூலம் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது நாட்டுப்படகில் தங்க கட்டியுடன் வந்த கடத்தல்காரர்கள் புலனாய்வு துறையினரை கண்டதும் தங்க கட்டி பார்சலை கடலில் வீசினர். கடத்தல்காரர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்த நாகூர் கனி, மன்சூர் அலி, அன்வர் என தெரிந்தது.
இலங்கை கடலில் அந்நாட்டு கடத்தல்காரர்கள் படகில் கடத்தி வந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டி பார்சலை நடுக்கடலில் காத்திருந்து வாங்கி மண்டபம் கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
கடலோர காவல் படையின் ஸ்கூபா நீச்சல் பயிற்சி வீரர்களை வரவழைத்து தங்க கட்டிகளை கடலில் நேற்று மாலை 5:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இரவில் தேடும் பணியை நிறுத்தி வைத்து, இன்று தேட முடிவு செய்துள்ளனர்.