நாகர்கோயில்: தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்பட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் வாழ்க்கை துணையை இழந்த பெண்களுக்கு, யுனைடெட் வே ஆப் சென்னை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் வாழ்க்கை துணையை இழந்த 25 ஏழை பெண்களுக்கு, 11லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்பட்டும். இவ்வாறு அவர் கூறினார்.