சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த, அரசு தேர்வுத் துறை தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ல் துவங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6ம் தேதியும் துவங்கஉள்ளது.
இந்த தேர்வுகளில், மாநிலம் முழுதும், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான விதிகள் குறித்து, பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 'தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில், உங்கள் மொபைல் போனை வைத்து விட வேண்டும். தேர்வு அறைக்குள் எடுத்து செல்லக் கூடாது.
'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, தேர்வுமையத்தில் பயன்படுத்தக் கூடாது. 'குறிப்பாக, வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதோ, அதன் வழியாக தகவல்கள் பரிமாறுவதோ கூடாது' என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.