அங்காரா: துருக்கி , சிரியா எல்லைப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் துருக்கியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெப்னி என்ற நகரை மையமாக வைத்து உருவான இந்த பூகம்பத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது.நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்பு பணியின் போது மேலும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் கட்டட இடிபாடுகளில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கி, சிரியா எல்லைப்பகுதியில் பூமிக்கு அடியில் 1.2 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய பூகம்பக ஆய்வில் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகவும் தகவல் வெளியாகியுள்ளது.