வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு ஹிந்து சமய மாநாடு விவகாரத்தில், ஹைந்தவ சேவா சங்கமும், அறநிலையத் துறையும் இணைந்து மாநாடு நடத்த, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற பேச்சில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பதற்றமான நிலை தணிந்தது.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் குளிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில், 1980ல் துப்பாக்கிச்சூடு நடந்ததில் பலர் இறந்தனர்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். நேரடியாக மண்டைக்காடு வந்து சமரசம் செய்து அமைதி ஏற்படுத்தினார். அதன் பின்னர், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் கொடை விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி ஹைந்தவ சேவா சங்கம் பத்து நாட்களும், தேவசம்போர்டு இடத்தில் பந்தல் அமைத்து சமய மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி, 85 ஆண்டுகளாக நடந்து வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியை இந்தாண்டு தேவசம்போர்டு தடை செய்ததோடு, அறநிலையத்துறை நேரடியாக இதனை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மண்டைக்காட்டை மீண்டும் கலவர பூமியாக மாற்றி விடக்கூடாது என, ஹிந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி தெரிவித்தார்.
இதை தி.மு.க. மாவட்ட செயலர், மேயர் மகேஷ் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மண்டைக்காடு வந்தார்.
![]()
|
உடன்பாடு
மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின், நாகர்கோவில் விருந்தினர் மாளிகையில் சமரச பேச்சு தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஐந்து மணி நேர பேச்சு, தனித்தனி ஆலோசனைக்கு பின்னர் ஹைந்தவ சேவா சங்கமும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து சமய மாநாட்டை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சி நிரலில் சிறுசிறு மாற்றங்களுடன் சமய மாநாடு நடைபெறும்,'' என்றார்.
இதே கருத்தை அமைச்சர் சேகர்பாபுவும் உறுதி செய்தார். இதனால் சில நாட்களாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. மார்ச், 5ல் துவங்கும் திருவிழா, 10 நாட்கள் நடக்கிறது.