மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 1வது வார்டு, கோனாதி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில், இறந்தவரின் உடலை அடக்கம் மற்றும் எரியூட்டல் செய்வதற்கு, கோனாதி முல்லை நகர் பிரதான சாலை இறுதியில் உள்ள காலி இடத்தை, பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு, சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை இல்லாததால், திறந்த வெளியில் இறந்தவரின் சடலத்தை எரியூட்டுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் கொண்டு வரப்படும் உடல்களை எரிக்கும் நேரத்தில், இந்த பகுதியில் மின் விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால், இறுதி மரியாதைக்காக செய்யும் சடங்குகள் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.