கோவை: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில், கோவையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பொது வசதி தொழில் நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளது, என, மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் வசதி மையத்தின் இணை இயக்குனர் சுரேஷ்பாபுஜி தெரிவித்தார்.
சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. கோவையில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் பொது வசதி மையம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் பொதுவசதி மையத்தின் இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி பேசியதாவது:
இன்ஜினியரிங் தொழிலில், லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் குறுந்தொழில்கள் தான் அதிகம் உள்ளன. தொழிற்சாலைகளின் முன்னேற்றத்துக்கு அரசு பல கிளஸ்டர்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த தொழிற்சாலைகள் அதிநவீன வசதிகளை பெற பெரும் தொகை தேவை. இவற்றுக்கு போதுமான நிதி வசதி சிறு, குறு, நடுத்தர தொழில்களிடம் இல்லை.
இத்தகைய வசதியை பெறும் வகையில், 200 கோடி ரூபாய் செலவில் அரசூர் அருகே பொது வசதி தொழில்நுட்ப மையத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது.
கோவையில் உள்ள பவுண்டரிகள், இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள், இந்த மையத்தால் பெரிதும் பயன் பெறும். இதுபோன்றே தங்க நகை ஆபரணங்கள் செய்ய ஒரு கிளஸ்டர் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இணை இயக்குனர் பேசினார்.
விழாவில், கொடிசியா தலைவர் திருஞானம் வரவேற்றார். கவுரவ செயலாளர் சசிக்குமார் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திருமுருகன், தொழில் வளர்ச்சிக்கு அரசு அளித்து வரும் உதவிகள் திட்டம் பற்றி பேசினார்.
கோவை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைவர் கோபிநாத், தேசிய சிறு தொழில் கழகத்தின் (என்.எஸ்.ஐ.சி.,) மேலாளர் பிரேம் ஆனந்த், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் கோவை துணை அலுவலர் விஜயலட்சுமி, கோவை மாவட்ட முன்னணி வங்கி பொதுமேலாளர் கவுசல்யா உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதி செய்ய ஆவணங்கள், இன்டஸ்ட்ரி 5.0 சிறப்பு அம்சங்கள் போன்றவை பற்றி விளக்கப்பட்டது.