கரூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரூரில் முலாம்பழம், விற்பனைக்கு குவிந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, பனிகாலம் முடிந்து, தற்போது, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துள்ளது. மாசி மாதம் தொடங்கியுள்ள உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கோடைக்காலத்தில், உடலில் ஏற்படும் சூட்டை குறைக்கும் வகையில், வெள்ளரிக்காய், தர்பூசணி, நீர்மோர், முலாம்பழம் ஆகியவற்றை, பொதுமக்கள், விரும்பி சாப்பிடுவது உண்டு. கரூரில் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலையோரம், வேன்களில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ள முலாம், ஒரு கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி
செல்கின்றனர்.