தானே, மஹாராஷ்டிராவில் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்த தந்தையை, அம்மிக் கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொன்ற மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவிலியைச் சேர்ந்த ௨௦ வயது இளைஞர், தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், ௬௯ வயதாகும் இவரது தந்தை, மகனை அடிக்கடி திட்டியும், துன்புறுத்தியும் வந்துள்ளார். நேற்றும் அவர் தன் மகனை திட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்; கூர்மையான ஆயுதத்தால், அவரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தந்தையை கொன்ற மகனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.