விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், கே.கே.சாலை மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 34; கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா, 32; இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சங்கருக்கு, குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து, விழுப்புரம் ராஜிவ்காந்தி நகரில் தனது தங்கை வீட்டில் பிள்ளைகளுடன் நித்யா வசித்து வருகிறார்.
சங்கர் அடிக்கடி அங்கு குடிபோதையில் சென்று, மனைவி நித்யாவிடம் குடும்பம் நடத்த வருமாறு, தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம், குடிபோதையில் சென்று நித்யாவை அழைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
நித்யா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சங்கரை கைது செய்தனர்.