திருத்தணி:திருவள்ளூர் - ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கிஷோர்குமார், 23. இவர், ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள பரமேஸ்வரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் சட்டக்கல்லுாரியில் படித்து வந்தார்.
திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆகாஷ், 24, என்பவர், திருப்பதியில் உள்ள ஒரு சட்டக்கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும், நேற்று காலை, ஒரே இரு சக்கர வாகனத்தில், திருவள்ளூரில் இருந்து திருத்தணி வழியாக, திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சென்ற போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார், திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கிஷோர்குமார், ஆகாஷ் ஆகிய இருவரும், பலத்த காயம் அடைந்தனர். இதில், கிஷோர்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆகாஷ், 108 ஆம்புலன்ஸ் மூலம், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.