சிவகாசி--வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலகம் சேதம் அடைந்திருப்பதால் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி அலுவலகம் 1986 ல் கட்டப்பட்டது. இங்கு, ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி, அக்கரைப்பட்டி, எழுவன் பச்சேரி, இனாம் மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் வருகின்றனர்.
ஆனால் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம் அடைந்துள்ளது. தலைவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேலே மேற்கூரை பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் மழைக் காலங்களில் கட்டடம் முற்றிலும் பெயர்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர், செயலர் உள்ளே அமர்ந்து அச்சத்துடனே பணிபுரிகின்றனர்.
மேலும் ஊராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்களும் அச்சத்துடனே வருகின்றனர். இடப் பற்றாக்குறையாகவும் இருப்பதால் ஊராட்சி அலுவலகத்திற்கு உடனடியாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.