சென்னை : வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை முடித்த சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக் கிராமத்தில், சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, 1992 ஜூன், 20ல் வனத்துறையினர், போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்களை, அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, நான்கு ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் உட்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என, 215 பேர் மீது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட, 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல், 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை, நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.
மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
வரும், 4ம் தேதி சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்திற்கு சென்று, ஆய்வு செய்ய போவதாகவும் அவர் தெரிவித்தார்.