திருப்பூர்:“இந்தியாவில், ஏழு ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் முக்கியமான பங்களிப்பு இருக்கும்,” என, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கூறினார்.
திருப்பூர் பின்னலாடை தொழிற் துறையினருடன், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சந்திப்புக் கூட்டம், பாப்பீஸ் ஹோட்டலில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பேசியதாவது:
பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஜவுளித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து யோசிக்கிறார். அதன் ஒரு பகுதியாக, ஜவுளித்துறையில் கோலோச்சும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.
தொழில் அமைப்புகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் உலகளாவிய பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு, பல்வேறு பிரத்யேக திட்டங்களை உருவாக்கவும் இந்தச் சந்திப்பு உதவும். நாடு முழுதும் மேலும் ஏழு ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு இருக்கும். ஜவுளித் துறையை மேம்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர திட்டங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலர் திருக்குமரன் உட்பட பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
மத்திய இணை அமைச்சரிடம், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியன் அளித்த மனுவில், 'திருப்பூரில் உள்ள சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 'டப்' திட்டத்தை நீட்டிக்க வேண்டும். மேலும், 2022ம் ஆண்டு ஏப்., 1ம் தேதியிட்டு திட்டம் தொடர்வதாக அறிவிக்க வேண்டும். செயற்கை இழை ஆடைகளுக்கு வழங்கப்படுவது போல், காட்டன் ஆடைகளுக்கும் முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகைகள் வழங்க வேண்டும். குறைந்த பட்சம், 10 கோடி ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு மானியம் அல்லது சலுகை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.