கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில், அதிகாரிகள் குருபரப்பள்ளியிலிருந்து கொத்த கிருஷ்ணப்பள்ளி செல்லும் சாலையில் நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த சரக்கு வேனை நிறுத்தி, அதிகாரிகள் சோதனை செய்ததில், 21 மூட்டைகளில், 50 கிலோ வீதம், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், வேன் டிரைவர் கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை தொப்பனப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், 27, என்பதும், கரூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரிந்தது. அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். வேன் மற்றும் டிரைவர் ஜெகதீசை, கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், ஜெகதீசை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.