வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் இணைக்க, 66.24 சதவீத பேர், தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர்.

தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி, கடந்த ஆண்டு ஆக., 1ல் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர். இப்பணி இம்மாதம், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலரிடம், ஆதார் எண் வழங்க முடியாதவர்கள், https://www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' மொபைல் செயலி வழியே, ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
துவக்கத்தில், வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக, ஆதார் எண் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது, இப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
கடந்த மாதம் வரை, 66.24 சதவீதம் பேர், அதாவது, 4.08 கோடி வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர்.
அதிகபட்சமாக, அரியலுார் மாவட்டத்தில், 97.83 சதவீதம்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 93.14 சதவீதம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலில் இணைக்க வழங்கி உள்ளனர்.

மிகவும் குறைந்தபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 31.92 சதவீத வாக்காளர்கள் மட்டுமே, தங்கள் ஆதார் எண்ணை வழங்கி உள்ளனர். மற்ற மாவட்டங்களில், ஆதார் எண் இணைப்பதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் முகாம் ஏதும் நடத்தப்படவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் எண், தேர்தல் கமிஷன் வழங்கிய மென்பொருள் வழியாக, கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆதார் எண் சேகரிப்பு பணி முழுமையானதும், வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி துவங்கும்.வாக்காளர்கள் ஆதார் எண் வழங்க, இம்மாதம், 31ம் தேதி கடைசி நாள். எனவே, ஆதார் எண் வழங்காத வாக்காளர்கள், விரைவாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.