தஞ்சாவூர்: மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் பக்தர்கள் புனித நீராடினர். முன்னதாக பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை போன்று, மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, ஆண்டுதோறும் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. மாசிமக விழாவினை முன்னிட்டு, கடந்த பிப்.25ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட ஆறு சிவாலயங்களிலும், 26ம் தேதி மூன்று பெருமாள் கோவில்களிலும், கொடியேற்றத்துடன் பத்துநாள் உற்சவம் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் உள்ளிட்ட மகாமத்திற்கு தொடர்புடையை, 12 சிவலாயங்களில் இருந்து, சுவாமி- அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடினர். தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தர்ப்பணம்:
மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சக்கரபாணி கோவில் தேரோட்டம்:
இதை போல, வைணவ தலங்களில், கடந்த பிப்.26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு, சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 9:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்:
சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஐந்து நாட்கள் கோவிலுக்குள்ளே உள்புறப்பாடு நடந்தது. இறுதி நாளான மாசி மகத்தன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடபழநி ஆண்டவர் கோயில்:
சென்னை, வடபழநி ஆண்டவர் கோயிலில் மாசி மகம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மாசி மகத்தை முன்னிட்டு இன்று (6ம் தேதி) சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து தீர்த்தவாரி மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி புறப்பாடில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருச்செந்துாரில் மாசித்தேரோட்டம்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.