சாணார்பட்டி-திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குரும்பபட்டி பெரிய காண்டி அம்மன் கோயில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது.
கூவனுாத்து ஊராட்சி குரும்பபட்டியில் உள்ள பெரிய காண்டி அம்மன் கோயில் உற்ஸவ விழா நேற்று நடந்தது. கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல், கருப்பண்ணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பூஞ்சோலையில் இருந்து அம்பாள் கரகம் பாவித்து மேளதாளம் முழங்க பெரிய காண்டி அம்மன் கோயிலுக்கு வந்தனர்.
கோயிலில் மகா நெய் தீப பூஜைகள் நடந்தது. நெய் தீபம் ஏற்றிய சிறிது நேரத்தில் கருட பகவான் வானத்தில் வட்டமிட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர்.
இதன் பின் கோயில் முன் வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் பூஜாரிகள் ஆக்ரோஷமாக தேங்காய் உடைத்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் முதியவர்கள் என 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி சத்தியராஜ் உடப்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.