பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் மணிவண்ணன், 40. தன் பாட்டியை கொலை செய்து நகையை திருடிய வழக்கில், 2014ல் இவரை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, செங்கல்பட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வந்த மணிவண்ணன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இதையடுத்து மணிவண்ணனை மாங்காடு போலீசார் தேடி வந்தனர். குன்றத்துார் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மணிவண்ணன் வசிப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, கதவு மூடியிருந்தது.
நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு, மணிவண்ணன் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
குன்றத்துார் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மணிவண்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.