திருவாலங்காடு:காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அரக்கோணம் அருகே பாலாற்றில் கலந்து, பின் திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை அருகே, கொசஸ்தலையாற்றில் கலந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.
திருவாலங்காடு ஒன்றியம், எல்.வி.புரத்தில் கொசஸ்தலையாற்றை மக்கள் கடந்து செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த தரைப்பாலம் கடந்தாண்டு பெய்த கன மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்டது.
இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மணவூர் செல்ல வேண்டிய நிலையில் உள்ள ூஎல்.வி.புரம் மக்கள் பாகசாலை வழியாக, 8 கி.மீ., தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்காலிக தரைப்பால உருளை மீது, மண் கொட்டி அமைக்கப்பட்டிருந்த நிலையில், மண் சரிந்து தற்போது பள்ளம் மேடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் கடுமையான சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றை கடக்க இந்த பகுதியில் உயர்மட்டப் பாலத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான அறிக்கை அளித்துள்ளோம். பாலத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.