விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் சுகன் மகள் தரணி, 19; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் கணேஷ் ராஜ், 22; என்பவரை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கணேஷ்ராஜ் அடிக்கடி தரணி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கணேஷ்ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த தரணி, சில தினங்களாக, அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தரணியின் வீட்டிற்குச் சென்றார். தரணியிடம், 'என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்' எனக் கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தரணியின் கழுத்து, தலையில் வெட்டினார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், கணேஷ்ராஜ் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த தரணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தரணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரப்பாக்கம் கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த கணேஷ்ராஜை கைது செய்தனர்.
மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியருக்கு 'போக்சோ!'
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சேர்ந்தவர் சகாயம் டெவின்ராஜ், 40; சிங்கம்பாறை பள்ளியில் தொகுப்பூதிய ஆசிரியராக பணிபுரிந்தார்; டியூஷனும் நடத்தி வந்தார். இதற்கிடையே, டியூஷனுக்கு வந்த மாணவியரில் ஒருவரை ஏற்கனவே இவர் சில்மிஷம் செய்துள்ளார். கடந்த, 13ம் தேதி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிய மாணவி, பெற்றோரிடம் புகார் கூறினார். மாணவி புகாரின் படி, முக்கூடல் போலீசார், ஆசிரியர் சகாயம்டெல்வின் ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.

2.75 கிலோ தங்கம் பறிமுதல்
வேலுார் மாவட்டம், காட்பாடி வழியாக செல்லும் ரயிலில், தங்கம் கடத்தப்படுவதாக சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காட்பாடி வழியாக சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், வாலாஜா ரோடு சந்திப்பு - காட்பாடி இடையே, சென்னை ஆர்.பி.எப்., கிரைம் போலீசார், நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பி - 2 பெட்டியில் கோவையைச் சேர்ந்த ஆனந்த நாராயணன், 50, என்பவரிடம், 2.750 கிலோ தங்கம், 35 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், ஆனந்த நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தைக்கு தொல்லை: வக்கீலுக்கு 'போக்சோ'
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்சாயத்து, காசா காலனியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பழனியப்பன், 55; வக்கீலான இவர் திருமணம் ஆனவர். இவர், 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, குளித்தலை மகளிர் போலீசில், குழந்தையின் தாய் புகார் அளித்தார். இதன்படி, போக்சோ வழக்கில், பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.
லஞ்ச சர்வேயர் 'சஸ்பெண்ட்'
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 56. விவசாய நிலத்துக்கு வரைபடம் கேட்டு விண்ணப்பித்தார். குடியாத்தம் நில அளவை பிரிவு தலைமை நில அளவையாளர் விஜய் கிருஷ்ணா, 47, அவரது உதவியாளர் கலைவாணன் ஆகியோர் இதற்கு லஞ்சம் கேட்டனர்.
தர விருப்பமில்லாத வேலு, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி, கடந்த, 9ம் தேதி, 15 ஆயிரம் ரூபாயை, அரசு அலுவலர்கள் இருவரிடமும் கொடுத்த போது, அவர்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சர்வேயர் விஜய் கிருஷ்ணாவை, சஸ்பெண்ட் செய்து, வேலுார் நில அளவை பிரிவு உதவி இயக்குனர் ராஜ் கணேஷ் நேற்று உத்தரவிட்டார்.
மாணவி பலாத்காரம்: பெயின்டருக்கு 'போக்சோ'
கடலுார், உச்சிமேட்டைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் முத்தமிழன், 23; பெயின்டர். இவரும், தனியார் கல்லுாரியில் படிக்கும் 17 வயதான மாணவியும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியிடம் பெயின்டர் நெருங்கி பழகினார். இதனால் மாணவி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனையறிந்த முத்தமிழன் கடந்த மாதம் 10ம் தேதி, கோவிலில் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, 17 வயது எனத் தெரிந்தது. இது குறித்து டாக்டர்கள் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார், 'போக்சோ' சட்டத்தில் முத்தமிழன் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.