வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், 'சர்வாதிகாரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்துள்ளதாக' ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது: கட்சியின் உச்சபட்ச பதவிக்கான தேர்தல், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எதுவும் முறைப்படி இல்லாமல், பிக்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது.
இடைத்தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெறுவதில் இருந்து சின்னம் உட்பட அனைத்தையும் விட்டுக்கொடுத்தோம். இபிஎஸ் அணி மீது அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது.
சர்வாதிகாரமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். இபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுக.,வை மீட்பதே எங்கள் நோக்கம். எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா இப்படிதான் கட்சியை நடத்தினார்களா? தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்.,க்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம்?
எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் பெரிய மாநாடு நடத்தப்படும். அதன் பிறகு மாவட்டம்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி ராமச்சந்திரன்

முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இந்த கட்சி மக்களிடம் செல்வாக்கு உள்ள கட்சி. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும்.
விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது என்பது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் பழனிசாமி திருந்தவில்லை.
இனியும் இவர்கள் திருந்துவார்கள், ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக பற்றி எதுவும் தெரியாத கூட்டம் அரசியல் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.