திருப்பூர்: திமுக தலைமை சமீபத்தில் கட்சி சார்பில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேனர், பிளக்ஸ் போன்றவைகளை வைக்க கூடாது என உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறி, திருப்பூரில் உதயநிதி நடித்த திரைப்படத்திற்கு, தி.மு.க.,வினர் முதல்வர் ஸ்டாலினை அர்ஜூனனாகவும், உதயநிதியை கிருஷ்ணராகவும் சித்தரித்து 'பிளக்ஸ் பேனர்' வைத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
பொதுக்கூட்டம் உட்பட நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 'பிளக்ஸ்', 'கட்அவுட்' வைக்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை இன்னமும் கட்சியினர் முழுமையாக பின்பற்றியதாக தெரியவில்லை. மீண்டும் இதனை நினைவூட்டும் வகையில், தி.மு.க.,வினர், பிளக்ஸ் பேனர், 'கட்அவுட்' வைக்க கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

ஆனாலும், கட்சி தலைமையின் உத்தரவை மீறி, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தி.மு.க.,வினர் அவ்வபோது, மெகா சைஸ், 'பிளக்ஸ்' வைத்து வருகின்றனர். மக்களுக்கு இடையூறாக வைக்க கூடிய 'பிளக்ஸ் பேனர்'களை, நிகழ்ச்சிகளும் முடிந்தாலும் அகற்றுவதில்லை. கடந்த மே மாதம், டவுன்ஹாலில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன், வழியை மறித்து உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர், அவர் நடித்த புதிய திரைப்படம் தொடர்பாக பிளக்ஸ் வைத்து இடையூறு ஏற்படுத்தினர். அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியதால், ரசிகர்கள் கோபமடைந்து மறியலில் ஈடுபட்டதும் நடந்தது.
உதயநிதிக்கு 'பிளக்ஸ் பேனர்'
அமைச்சர் உதயநிதியின் புதிய சினிமா தொடர்பாக, புஷ்பா தியேட்டர், மேம்பாலம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பிளக்ஸ் வைத்துள்ளனர். கட்சியின் உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள 'பிளக்ஸ் பேனர்'களால் நடவடிக்கை பாய்ந்து விடுமோ என்ற பயத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., என்பதை மட்டும் மறைத்துள்ளனர்.

இதேபோல, ரயில்வே மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டுள்ள, பிளக்ஸ் ஒன்றில், குருஷேத்திர போரில், பங்கேற்கும் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் தேர் ஓட்டும் நிகழ்ச்சியை மையமாக வைத்து, ஸ்டாலினை அர்ஜூனனாகவும், உதயநிதியை கிருஷ்ணராகவும் சித்தரித்து பிளக்ஸ் அச்சிட்டு வைத்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் பலர், 'ஹிந்து மதத்தை கேலி செய்து, பிளக்ஸ் வைப்பது தான், திராவிட மாடலா?' என கேள்வி எழுப்பினர். இந்த புகைப்படம் சர்ச்சை ஆகியுள்ளது.