மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: திருச்சியில், தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல் நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளனர்.இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது; அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி என்ற மிதப்பிலேயே, சிலர் இதுபோல நடந்து கொள்கின்றனர்.
டவுட் தனபாலு: நல்லவேளை, இப்ப கருணாநிதி இல்லை... அவர் மட்டும் இருந்திருந்தா, ஒரு காலத்துல நீங்க ஆட்சி நடத்திய மேற்கு வங்கத்துலயும், இப்ப ஆட்சியில இருக்கிற கேரளாவுலயும் நடந்த, நடந்துட்டு இருக்கிற உங்க ஆட்களின் அராஜகங்களை புள்ளி விபரங்களோட புட்டு புட்டு வச்சு, உங்க மனசை புண்ணாக்கியிருப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்:1973ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்த போது, தமிழக காவல் துறையில், முதல் முறையாக பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர்.பெண் போலீசாருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, அவரதுபெயரில் காவல் பணி விருதும், கோப்பையும் வழங்கப்படும். டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... அதே நேரம், அனைத்து மகளிர் காவல் நிலையம் திட்டத்தையும், 1992ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தானே கொண்டு வந்தாங்க... அவங்க நினைவாகவும் ஒரு விருதும், கோப்பையும் குடுத்தா, அ.தி.மு.க.,வினரே தங்களை பாராட்டுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
உ.பி.,யில் செயல்படும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்: உ.பி.,யில் பா.ஜ.,வை தோற்கடித்து விட்டால், நாடு முழுதும் அக்கட்சியை தோற்கடித்து விட முடியும். எங்களை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ., இரு கட்சிகளிடம் இருந்தும், நாங்கள் விலகியே இருக்கிறோம்.டவுட் தனபாலு: நீங்க, அந்த ரெண்டு கட்சிகளிடம் இருந்தும் விலகி இருக்கலாம்... ஆனா, உங்க கட்சியில நடக்கிற குடும்ப அரசியலை கண்டு, உங்களை விட்டு, அந்த மாநில மக்கள் எப்பவோ விலகிட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. தற்போது, 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பல்கலை ஊழியர்களை, திடீரென பணி நீக்கம் செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: இந்த தொகுப்பூதிய பணியாளர்களை பணி நீக்கம் செய்துட்டு, தங்களது ஆட்களை புதுசா தொகுப்பூதியத்துல நியமித்து, ஆட்சி முடியும் தருவாயில், அவங்களை பணி நிரந்தரம் செய்ய ஆளுங்கட்சியினர், 'பிளான்' போடுறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக கவர்னர் ரவி: உலகில்முன்னேறிய நாடுகள், கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிய போது, அவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்தன. ஆனால், உயிர்களை காப்பதை மட்டுமே இலக்காக கொண்டு, இந்தியா தடுப்பூசிகளை உருவாக்கியது. அதனால் தான், உலகின் பல நாடுகள் பொருளாதார மந்த நிலையில் உள்ள போதிலும், நம் நாடு வரவேற்கத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தடுப்பூசிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி பண்ணி, பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்க்கதுடித்த நாடுகள், நாமே தடுப்பூசிகள் தயாரித்து, இலவசமாகவே மற்ற நாடுகளுக்கு வழங்கியதும் வாயடைத்து போயின... 'கெடுவான், கேடு நினைப்பான்' என்ற கதையாக, இன்று பொருளாதார நெருக்கடியில் புலம்புகின்றன என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: சென்னை, கொத்தவால்சாவடிதாத்தா முத்தையப்பன் தெருவில், தற்போது திறக்கப்பட்டுள்ள நவீன ரேஷன் கடை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து, பிற பொருட்களையும் விற்கக்கூடிய, 'மினி சூப்பர் மார்க்கெட்' போல அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து ரேஷன் கடைகளும் சுகாதாரமாகவும், நவீனமாகவும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் நிறைந்ததாகவும் மாற்றி அமைக்கப்படும்.
டவுட் தனபாலு: ரேஷன் கடைகளை நவீனப்படுத்துறது எல்லாம் இருக்கட்டும்... புழுத்து போன அரிசியையும், உளுத்து போன பருப்பையும், கெட்டி தட்டி போன சர்க்கரையையும் மாத்தி, எப்ப தரமான பொருட்களா தருவீங்க என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தர முடியுமா?
Advertisement