காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, இந்திரா நகர் ரேஷன் கடையில், 1,039 கார்டுதாரர்களுக்கு, கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடையை ஒட்டி வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவு நீரை சாலையில் விட்டுள்ளனர்.
இதனால், ரேஷன் கடையை சுற்றிலும் கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் ரேஷன் கடைக்கு வந்து செல்வோர் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், ஒரே இடத்தில் தேங்கும் கழிவு நீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், இந்திரா நகரில், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ரேஷன் கடையை ஒட்டியுள்ள பகுதியில் கழிவு நீர் விடுவோர் மீது வட்டரா வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் ரேஷன் கடையை சுற்றிலும் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என இந்திரா நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.