வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய மத போதகருக்கு சொந்தமான எட்டு இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர்.
![]()
|
ஜம்மு- - காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தின் ரெபானைச் சேர்ந்தவர் மவுலவி சர்ஜன் பார்கதி.
இஸ்லாமிய மதபோதகரான இவர், பிரிவினைவாதத்தை துாண்டும் வகையில் பிரசாரம் செய்தது, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டங்களை துாண்டுவது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 2016ல் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு நிதி
கடந்த, 2020ல் சிறையில் இருந்து வெளியே வந்த இவர், தொடர்ந்து நம் நாட்டிற்கு எதிரான பிரசாரங்களை, இளைஞர்கள் மத்தியில் செய்து வந்தார். இந்நிலையில், இவர் பயங்கரவாத செயல்களை நடத்த, வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பார்கதி மீது ஏற்கனவே பதியப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாநில புலனாய்வு அமைப்பினர், அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து மட்டும் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டி இதை, தன் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது.
![]()
|
பார்கதி பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி, அவற்றை அதிக விலைக்கு விற்று, அதில் வரும் வருவாயின் வாயிலாக மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை கற்றுத் தரும் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
பறிமுதல்
இதையடுத்து, பார்கதிக்கு சொந்தமான எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, இவருக்கு உடந்தையாக இருந்த 10 பேரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.