வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்., - எம்.பி., ராகுல் பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதை ஆராய சிறப்புக் குழு அமைத்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பான பேச்சு பார்லிமென்டில் நாளை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
சமீபத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்ற ராகுல், லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மற்றும் அந்நாட்டு பார்லி., உள்ளிட்ட இடங்களில் பேசினார்.
அங்கு இவர் கூறிய கருத்துகள், இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த பிரச்னை, தற்போது நடந்து வரும் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிரொலித்து வருகிறது.
பா.ஜ., -உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிஉள்ளன.
இந்த விவகாரத்தில், ராகுல் பார்லி.,யில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பா.ஜ., உறுப்பினர்கள், சமீபத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர்.
அப்போது, 'ராகுல் பேசிய பேச்சு குறித்து ஆராய சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். விசாரணையின் அடிப்படையில், அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
![]()
|
இந்நிலையில், இந்த விவகாரத்தை நாளை பார்லி.,யில் மீண்டும் எழுப்ப பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அதே சமயம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் மற்றும் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவர் என்பதால் நாளையும் சபை நடவடிக்கைகள் முடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, பா.ஜ., கோரிக்கைபடி, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தால், ராகுல் நாளை 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -