சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் இதர செலவு என்ற பெயரில் ரூ.பல கோடி மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளோம், என தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை மாநில பொது செயலாளர் எஸ்.மலைச்சாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:
கூட்டுறவு சங்க ஊழியர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைபடுத்த வில்லை. கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பிற்கான கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி பொது மேலாளர் பணியிடம் நிரப்ப படாமல் உள்ளதை, உடனே நிரப்ப வேண்டும். 20 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர், ஊழியர்களை பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் இதர செலவுகள் பெயரில் ரூ.பல கோடி மோசடி நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணிமூப்பு வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 25ல் சிவகங்கை அரண்மனைவாசலில் இருந்து திருப்புத்துார் வரை நீதி கேட்டு இரண்டு நாள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். மார்ச் 26 ல் திருப்புத்துாரில் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பனிடம் புகார் அளிக்க உள்ளோம், என்றார்.